Saturday, May 2, 2020

இன்று அறிவியல் அறிஞர் எலைஜா மெக்காய் (Elijah McCoy) பிறந்த தினம்


எலைஜா ஜெ. மெக்காய் Elijah J. McCoy (1844 மே 2 – 1929 அக்டோபர் 10) என்றழைக்கும் இவர், ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒரு கனடிய-அமெரிக்க கண்டுபிடிப்பாளராகவும், மற்றும் பொறியாளராகவும் கருதப்படுகிறார். மேலும், அவரது குறிப்பிடத்தக்க 57 கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்க காப்புரிமை பெற்றவராகவும், பெரும்பாலான நீராவி இயந்திரத்தின் உயவிடல் (lubrication) செய்யப்பட்டவராகவும் அறியப்படுகிறார்.


EJMcCoy.jpg
பிறப்பு:
வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவில், ஆன்டாரியோ மாகாணத்தின் கோல்செஸ்டர் பகுதியில், 1844-ம் ஆண்டு மே மாதம் 2-ம் நாளில் ஜார்ஜ், மில்டிரட் தம்பதியர்க்கு பிறந்த எலைஜா ஜெ. மெக்காய், ஐக்கிய அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார்.

ஆரம்பகால வாழ்க்கை:
சிறு வயது முதலே இயந்திரங்கள் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்த எலைஜாவின் பெற்றோர், ஐக்கிய அமெரிக்காவில் இருந்து தப்பி வந்த அடிமைகளாக இருந்துள்ளனர். மீண்டும், 1847-ல் அவரது குடும்பம் அமெரிக்கா சென்று மிச்சிகனில் குடியேறியது. அக்காலகட்டத்தில், அமெரிக்காவில் கறுப்பினத்தவர் படிப்பது சிரமம் என்பதால், அவரது பெற்றோர் 15 வயது மகனை இசுக்கொட்லாந்தின் எடின்பரோ நகருக்கு அனுப்பினர். அங்கு படித்து இயந்திரவியல் பொறியாளராக தகுதி பெற்று, ஊர் திரும்பிய மெக்காய் திறன்மிக்கவராக இருந்தும், கறுப்பினத்தவர் என்பதால் ஏற்ற வேலை கிடைக்கவில்லை. தற்காலிகமாக, மிச்சிகன் மத்திய ரயில்வே துறையில் தீயணைப்பு வீரராகவும், இயந்திரத்திற்கு (engine) எண்ணெய் (Oil) போடும் பணியாளராகவும் வேலை செய்தார்.

கண்டுபிடிப்புகள்:
எலைஜா, தனது பணியை மட்டுமே பார்த்துக்கொண்டிராமல், இயந்திரம் இயங்கும் முறையை ஆராய்ந்தவாறே இருந்தார். நீராவி இயந்திரங்களுக்கு எண்ணெய் (ஆயில்) இடுவதற்கான ‘எண்ணெய் சொட்டு கோப்பை’ (Oil-trip cup) என்ற தானியங்கி உயவிடுவான் (Automatic Lubricator) ஒன்றை கண்டறிந்தார். அது இயந்திரத்தின் ஓடும் பாகங்களில் சமமாக எண்ணெய் ஊடுருவுமாறு செய்தது. மேலும் இயந்திரம் சூடாகாமல், தடையின்றி தொடருந்து நெடுநேரம் தொடர்ந்தோட இது வழிவகுத்தது. அந்த எண்ணெய் சொட்டு கோப்பைக்கான காப்புரிமையை (காப்புரிமை எண் 120,843,) 1872-ல் சூன் 23-ம் நாளன்று ஐக்கிய அமெரிக்க நாட்டின் காப்புரிமை அலுவலகத்திடமிருந்து பெற்றார்.

இவரது கண்டுபிடிப்பு சாதாரணமானது என்றாலும், இது தொடர்வண்டிகளை விரைவாக ஓடச் செய்து, அஞ்சல், பொட்டலம் (Parcel) போன்ற சேவைகளை துரிதமாக்கி, அத்தொழிலையே லாபகரமாக மாற்றியது. தன் பொறியியல் திறனைப் பயன்படுத்தி இயந்திரங்களில் பல மேம்பாடுகளைச் செய்த மெக்காய். தொடர்ந்து தான் கண்டறிந்த கருவிகளை மேம்படுத்தினார்.

பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இரும்புப் பலகை (ironing board), நீர் தெளிப்பான் (sprinkler), காலணிகளுக்கான குதிகால் மீள்மம் (Rubber Heel) என பலவற்றைக் கண்டறிந்ததோடு, அனைத்துக்கும் காப்புரிமை பெற்றார். இவர் கண்டறிந்த சாதனங்களில் 50-க்கும் மேற்பட்டவை உயவிடுவான் வகையோடு தொடர்பானவையாகும் .

அங்கீகாரம் மறுப்பு:

கறுப்பினத்தவரில் மிக அதிகமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, அவற்றுக்கான காப்புரிமை பெற்றவர் என்று போற்றப்பட்ட எலைஜா ஜெ. மெக்காய், பற்றிய குறிப்பு, 1909-ல் புக்கர் டி வாஷிங்டன் (Booker T. Washington) என்பவர் எழுதிய ‘ஸ்டோரி ஆஃப் தி நீக்ரோ’ (Story of the Negro) என்ற புகழ்பெற்ற நூலில் உள்ளது. அதேநேரம், கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதாலேயே, பெரிய அளவில் அங்கீகாரம் மறுக்கப்பட, அதைப் பற்றி கவலைப்படாத எலைஜா, ஏறக்குறைய 50 சாதனங்களுக்கு காப்புரிமை பெற்றார். தான் கண்டறிந்த உயவிடுவான் (Lubricator) சாதனங்களை உற்பத்தி செய்ய முதலீடு இல்லாததால், தனது முதலாளிகள், முதலீட்டாளர்களிடம் இவற்றுக்கான உரிமங்களை விற்றுவிட்டார். இதனால், இவர் கண்டறிந்த பல சாதனங்கள் பற்றிய குறிப்புகளில் கண்டுபிடிப்பாளராக இவரது பெயர் இடம்பெறவில்லை. இறுதியாக, தான் கண்டறிந்தவற்றை உற்பத்தி செய்வதற்காக 1920-ல் தன் பெயரில் ஒரு தொழிற்சாலை தொடங்கினார். அங்கு இவரது பெயர் தாங்கிய உயவிடுவான் சாதனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

இறப்பு:
வாழ்நாள் முழுவதும் எதையாவது கண்டுபிடித்துக்கொண்டே இருந்தவரும், உயவிடல் நுட்பத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான எலைஜா ஜே.மெக்காய் ஒரு நான்கு சக்கர வாகன விபத்தில் காயம் அடைந்தவர், அதில் இருந்து முழுமையாக குணமடையாமலே, ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ள மிச்சிகன் மாநிலம் டிட்ராயிட் பெருநகரில் 1929-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாள் தனது 85-வது அகவையில் மறைந்தார்.


Friday, May 1, 2020

இன்று நோபல் பரிசு பெற்ற அறிஞர் சான்டியாகோ ரமோன் கசல் பிறந்த தினம்


சான்டியாகோ ரமோன் கசல் (Santiago Ramón y Cajal) 1852 மே 1 – 1934 அக்டோபர் 18) எசுப்பானிய அறிவியலாளரும், நவீன நரம்பியல் துறையின் தந்தையும், நோயியல் மருத்துவரும் ஆவார். 1906-ல் உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.

Cajal-Restored.jpg



ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள எசுப்பானியாவின் பெட்டில் டி அரகோன் நகரில், நவார்ரெ என்ற பகுதியில் 1852-ம் ஆண்டு, மே மாதம் 1-ம் நாள், ரமோன் பிறந்தார், தாய் "அந்தோனியா கஸல்", தந்தை "ஜஸ்டோ ரமோன் கசசுஸ்" ஆகியோர் ஆவர்.



குறும்பு சிறுவன்:

அவரது தந்தை ஜஸ்டோ ரமோன் கசசுஸ் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராகவும், உடற்கூறியல் பேராசிரியராகவும் இருந்தவர். சிறுவன் ரமோனின் குறும்புகள் அதிகரித்ததால், பள்ளியில் இருந்து நிறுத்தினார் தந்தை. முடி திருத்துபவரிடமும், செருப்பு தைப்பவரிடமும் தன் மகனை உதவியாளராக சேர்த்துவிட்டார். அதன் பிறகும், பெரிதாக மாற்றம் இல்லாததால், மீண்டும் சிறுவனை பள்ளியில் சேர்த்தனர்.



ஓவியன்:


அற்புதமாக ஓவியம் வரையும் திறன்கொண்ட ரமோனுக்கு, ஓவியக் கலைஞராக வரவேண்டும் என்பதே ஆசை. 16 வயது இருந்தபோது, கல்லறைத் தோட்டங்களுக்கு அழைத்துச் சென்ற தந்தை, அங்கு கிடக்கும் எலும்புகளை ஓவியம் வரையுமாறு கூறினார். இதன்மூலம் மகனுக்கு உடற்கூறியலில் ஆர்வம் ஏற்படலாம் என்று அவர் நம்பினார்.



படிப்பும் பணியும்:


தனது தந்தை பணியாற்றும் ஸாரகோஸா பல்கலைக்கழகத்தில் (University of Zaragoza), 1869-ல் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ரமோன், தந்தையின் வழிகாட்டுதலில் சிறப்பாக பயின்றார். தலைசிறந்த மாணவருக்கான விருதையும் வென்ற அவர், 1873-ல் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.பிற்காலத்தில், கட்டாய ராணுவ சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சான்டியாகோ ரமோன் கியூபா, எசுப்பானியா போன்ற ராணுவ மருத்துவ முகாம்களில் 1874-1875 காலகட்டத்தில் பணியாற்றினார். கடும் வயிற்று வலி, மலேரியாவால் பாதிக்கப்பட்டதால், ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்பு அம்மா, சகோதரிகளின் பராமரிப்பில் சிறிது காலம் இருந்து, உடல்நலம் தேறினார். ஸாரகோஸா பல்கலைக்கழகத்தில் உதவி ஆசிரியராகவும், உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றிய ரமோன், மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அங்குள்ள உடற்கூறியல் அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு சிறப்பு பணியாற்றினார்.

ஆய்வும் கண்டுபிடிப்பும்:

எசுப்பானியாவில் உள்ள மூன்றாவது பெரிய நகரமான வலென்சியாவில் உள்ள வலென்சியா பல்கலைக்கழகம்|வாலென்சியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த ரமோன் கஸல், அங்கு உயிரியியல் சோதனைகளுக்கான ஆய்வுக்கூடத்தை நிறுவினார். அழற்சி நோய்கள் (Inflammatory Diseases), வாந்திபேதி (Cholera), நுண்ணுயிரியல் (Microbiology), புறவணியிழையம் (Epithelium), இழையம் (Tissue (biology) திசுக்களின் கூட்டமைப்பு ஆகியவை குறித்து ஆராய்ந்தார். 1887-ல் பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் (University of Barcelona) இணைந்த கஸல், நரம்பியல் திசுக்களை ஆராய்வதற்கான கோல்கீஸ் முறையைக் (Golgi's method) கற்று, அதை மேம்படுத்தினார். மத்திய நரம்பு மண்டலத்தின் நரம்பியல் கட்டமைப்புகள், செல் வகைகள் அவற்றின் கட்டமைப்பு கள், அவற்றின் இணைப்பு குறித்து விரிவான விளக்கங்களை வழங்கி, துல்லியமான படங்களையும் வரைந்தார்.



படைப்பும் பரிசும்:


ரமோன் கஸல் பல நூல்களையும், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் போன்ற மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். 1905-ல் புனைப் பெயரில் "டாக்டர் பாக்டீரியா," (Dr. Bacteria) "விடுமுறை கதைகள்" (Vacation Stories) என்ற தலைப்பில் 5 அறிவியல் புனைகதைகளை எழுதி வெளியிட்ட கஸல், எசுப்பானியாவில் கல்வி, அறிவியல் ஆய்வுகள் மேம்பாட்டுக்காக ஏராளமான முனைப்புகளை மேற்கொண்டார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல விருதுகள், பட்டங்கள், கவுரவங்களைப் பெற்றவராக கருதப்படுகிறார். ‘நியூரான் டாக்ட்ரின்’ என்று பின்னாளில் அழைக்கப்பட்ட நரம்புத் தொகுதி கட்டமைப்பு குறித்த இவரது கண்டுபிடிப்புகளுக்காக 1906-ல் இத்தாலிய விஞ்ஞானியான கேமிலோ கொல்கியுடன் இணைந்து இவருக்கு உடலியல் அல்லது மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.



இறப்பு:


நோயியல் நிபுணர், தசைக்கூறு ஆராய்ச்சியாளர், சிறந்த நரம்பியல் விஞ்ஞானி என போற்றப்பட்ட சான்டியாகோ ரமோன் கஸல், இறக்கும் தருவாயிலும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். சான்டியாகோ ரமோன் கஸல், ஐரோப்பா|ஐரோப்பிய கண்டத்திலுள்ள எசுப்பானியாவின் மத்ரித் நகரில் 1934-ம் ஆண்டு, அக்டோபர் 18-ம் நாள் தனது 82-வது அகவையில் மறைந்தார்.